கொல்லிமலையின் மூன்றாவது மலைப்பாதை பணிகள் துவக்கம்

சுமார் 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள கொல்லிமலைக்கு ஏற்கனவே  மேற்கு பகுதியிலிருந்து  ஒன்றும் இரண்டாவதாக சமீபத்தில்  வடக்கு பகுதியிலிருந்து ஒரு மலைப்பாதையும்  அமைக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு பகுதியில் மூன்றாவதாக புதிய மலைப்பாதை அமைக்க சில தினங்களுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டுள்ளது.


மேற்கு பகுதி பாதை காரவள்ளி அடிவாரத்திலிருந்து ( 780 அடி MSL) சோளக்காடு பகுதிக்கு ( 3890அடி MSL))  சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவை   அதாவது 3100 அடி உயரத்தை 70 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக சற்று சிரமத்துடன் சென்றடைகிறது.


வடக்கு பகுதி பாதை மூலக்குறிச்சி கிராமத்திலிருந்து ( 1570 அடி MSL)) நரியங்காடு பகுதிக்கு ( 3300அடி MSL))  சுமார் 11.3 கிலோ மீட்டர் தொலைவை   அதாவது 1730அடி உயரத்தை 4 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக சற்று எளிதாக சென்றடைகிறது.


முதல் பாதை மலைஏறிய இடத்திலிருந்தும் இரண்டாம் மலைஏறிய இடத்திலிருந்தும் கொல்லிமலையின் வடகிழக்கு பகுதியான ஆலத்தூர் நாட்டில் உள்ள கடை கோடி கிராமமான வேலிக்காடு சென்றடைய சற்று ஏறக்குறைய மற்றும் ஒரு 30 கிலோ மீட்டர் பயணிக்கவேண்டும்.


ஆனால் அவர்கள்   மூன்றாவது வழியாக உயரம் குறைந்த  மலைஉச்சியான   வேலிக்காட்டிலிருந்து ( 2200 அடி MSL)) அடிவார பகுதியான சேரடிமுனை பகுதிக்கு ( 1350அடி MSL))  சுமார்  850 அடி உயரத்தை  2.5 கிலோ மீட்டர் தொலைவை கடந்தாலேயே   எளிதில் சென்றடையலாம்.


இதற்கு முன்பே அப்பகுதி உள்ளுர்  மலைவாழ்வாசிகள் இருசக்கர வாகனத்தில் செல்ல அவ்வழியில் தற்காலிக செங்குத்தான  மண் பாதை அமைத்திருந்தனர். 

 தூரத்தை மிச்சப்படுத்த  என்னால் எடுக்கப்பட்ட அச் செயல்  சற்றேறக் குறைய ஒரு தற்கொலை முயற்சியை ஒத்திருந்தது.  எனது முப்பதாண்டு இரு சக்கர வாகன பயணத்திற்கு  அப்பயணங்கள் ஒரு சவாலாகவே இருந்தது. டாங்க் கவரில் வைக்கப்ட்டிருக்கும் பொருட்கள்  சரிவு காரணமாக கீழேவிழுந்ததைகூட கவனிக்க முடியாத அளவிற்கு செங்குத்து பாதையாகவும்  முழு கவனத்தையும்  செலுத்தினால் உயிர் தப்பி  பயணிக்கலாம் என்ற நிலை இருந்தது. 
.
எந்த மனிதரும்   அப்பாதையில்  கீழே விழாமல் பயணித்ததாக சொன்னால் அவருக்கு கிடைக்கும் மரியாதையே தனி.  ஆனால் அப்பகுதி மக்கள் இருவர் கூட ஒரே  இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைக் கண்டும்  அவர்களது திறமை கண்டு அதிசயத்திருக்கிறேன்.
.
 இயல்பாகவே  மிக நல்லசுவையுள்ள அப்பகுதி பலாப்பழங்கள் இப்பாதை வழியாக கொண்டு செல்லவும் , பல தலைமுறைகளாக அனாதையாக விடப்பட்ட மக்களுக்கு ஒரு விடிவு கிடைத்துள்ளது.
.
 மேலும் அடிவாரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள தம்மம்பட்டி  பகுதிக்கு  மிக விரைவில் செல்ல  இயலும்.
 சென்னையிலிருந்து சுற்றுலா வரும் மக்கள் மலையேறும் கலைப்பே இல்லாமல் மிக்க குறைவான  தூரத்தில் கொல்லிமலையை  வருங்காலத்தில அடைய இயலும்.

  எல்லாவற்றையும் விட  அப்பாதை மிக நல்லமுறையில் அமைக்கப்பட்டு முடித்தால் 
  ஒரு பெரிய மலையின் மேலிருந்து அடிவாரத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சில நிமிடங்களில் இறங்கிவிடும் மலைப்பாதை என்ற சாதனைக்கும் வாய்ப்புள்ளது. 

Comments